இஸ்ரேல் – இரான் மோதல்: இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள்

0
54

இரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏப்ரல் 1இல் தொடங்கிய பதற்ற நிலை தற்போது மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம், இரான் 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இருந்து இது குறித்த அச்சம் நிலவி வந்தது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என்று இரான் கூறியது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து இதுவரை இஸ்ரேல் எந்தவித கருத்தையும் தெரிவிக்காத நிலையில், வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா நல்லுறவைக் கொண்டிருப்பதால், இந்த நிலை இந்தியாவுக்கு மேலும் தொந்தரவாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும், மேற்காசிய நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். எனவே, இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இரானின் தாக்குதலுக்குப் பிறகே, இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இரு நாடுகளும் ராஜதந்திர உத்தியைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டது.

மேலும், இந்தியர்கள் இந்த இரு நாடுகளுக்கும் பயணிக்க வேண்டாமென்றும் பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.

இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், இந்த இரு நாடுகள் மற்றும் மேற்கு ஆசியாவின் பிற நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பே இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

தனது பயண வழிகாட்டுதலின்படி, இஸ்ரேல் அல்லது இரானுக்கு பயணம் செய்ய எந்தவிதமான தடையையும் இந்தியா விதிக்கவில்லை. மாறாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது இஸ்ரேலில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர், இரானில் 5 முதல் 10 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

ஹமாஸுடனான போர் தொடங்கிய பிறகு இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் தொழிலாளர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் இருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் முழு சோதனைக்குப் பிறகு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

ஏற்கெனவே ஹரியாணாவில் இருந்து சுமார் 530 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். ஆனால் இந்திய அரசு பயண ஆலோசனை வெளியிட்ட பிறகு, மீதமுள்ள தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களின் நிலை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலை சேர்ந்த மூத்த உறுப்பினர் டாக்டர். ஃபஸூர் ரஹ்மான் கூறுகையில், ” 90 லட்சம் முதல் 10 மில்லியன் இந்தியர்கள் வரை மேற்காசிய நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50 முதல் 55 லட்சம் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள்.”

“இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை செய்யும் முக்கிய நாடுகளான சௌதி அரேபியா, இரான் உள்ளிட்ட முன்னணி நாடுகள் மேற்கு ஆசியாவில்தான் உள்ளன. எனவே இந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தால், அது நிச்சயமாக இந்தியாவுக்கு சிக்கலாக அமையும்” என்கிறார்.

அதேநேரம் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் உள்ள நெல்சன் மண்டேலா மையத்தின் பேராசிரியரான டாக்டர் பிரேமானந்த் மிஸ்ரா கூறுகையில், “காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடியாக செங்கடலில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.”

“இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள பாதிப்பு கடல் வர்த்தக பாதைகளில் ஏற்கெனவே வெளிப்படையாகத் தெரிகிறது. இந்நிலையில் இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் சூழல் ஏற்பட்டால், இந்தியா நீண்ட காலத்திற்கு நடுநிலைக் கொள்கையைக் கடைபிடிப்பது கடினம்,” என்கிறார்.

இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உறுதியானதையடுத்து, உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. வெள்ளியன்று, ஆசியாவில் கச்சா எண்ணெய் விலை மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர்களை எட்டியுள்ளது.

அதே நேரத்தில் தங்கத்தின் விலை புதிய சாதனையாக, அவுன்ஸ் ஒன்றுக்கு 2400 டாலர்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. எண்ணெய் விலையில் ஏற்படும் உயர்வு ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிப்பதாக பிரேமானந்த் மிஸ்ரா கூறுகிறார்.

மேலும், “இது மக்களவைத் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் காலம். இப்போது பணவீக்கம் அதிகரித்தால் அது இங்கு தேர்தல் அரசியலில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும், அதை இந்தியா விரும்பாது” என்கிறார்.

இந்தியா எண்ணெய்க்காக ஆப்பிரிக்க நாடுகளிடம் செல்லலாம். இருப்பினும் இரானிடம் மலிவு விலையில் எண்ணெய் கிடைத்திருக்கும். ஆனால், அது தற்போதைய நிலையில் கிடைக்காது என்று கூறுகிறார் அவர்.

இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்த தனது கவலையை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் இந்தப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவது எவ்வளவு முக்கியம் என்பதையும் குறிப்பிட்டிருந்தது. ராஜதந்திர உறவுகளின் மூலம் வன்முறை மற்றும் தாக்குதலில் இருந்து உடனடியாகப் பின்வாங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என இந்தியா கூறியது.

ஆனால் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் வெளியுறவுக் கொள்கையில் முரண்பாடு தெரிவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். முன்பு இரான் மீது அமெரிக்கா விதித்திருந்த தடைகள் இருந்ததாகவும், ஆனால் தற்போது நிலைமை வேறு என்றும் நம்புகிறார் பிரேமானந்த் மிஸ்ரா.

தற்போது இஸ்ரேலுடனான உறவைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியா விரும்பினால், அது இரானுடனான உறவை மோசமாக்கிவிடும். இதுவே இரானுடன் நெருங்கிப் பழகினால், அது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா அதிகம் பேசுவதைத் தவிர்ப்பது, இந்தியாவிலும் ஒரு குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது என்பதற்கான அறிகுறி. இந்தக் குழப்பமான சூழ்நிலை ஒரு சவால் இல்லை என்றாலும்கூட, இது ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கான நெருக்கடி.”

“என்னைப் பொறுத்தவரை, இதுபோன்ற பிரச்னைகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதிகமாக நடுநிலையே என்பதால், ஒரு ராஜதந்திர நெருக்கடி உள்ளது. இரான் மற்றும் இஸ்ரேலுக்கு நடுவில் இந்தியா மாட்டிக்கொண்டிருக்கிறது,” என்கிறார்.