ஆம்புலன்ஸ் சேவையில் இல்லை; யாழ்ப்பாணம் நயினாதீவில் கடலில் பிறந்த குழந்தை!

0
35

யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை (17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் போக்குவரத்து படகில் பிறந்த குழந்தை 

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனை அடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால் பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.

படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும் அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.