இனியாவது வாழவிடுங்கள் – உருக்கமான பதிவு: உலகத் தமிழர்களுக்கு நன்றி – முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார்

0
44

தாயகம் திரும்பியுள்ள முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தமது பூர்வீக வாழ்விடங்களுக்கு வந்தடைந்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சிறையிலடைக்கப்பட்டிருந்த இவர்கள் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அரசியல் பிரமுகர்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளுக்கமைய நேற்று புதன்கிழமை இலங்கைத் தீவை வந்தடைந்தனர்.

இந்நிலையில் குறித்த மூவரயும் குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மு. கோமகன் நேரில் சந்தித்து சுகநலன் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்தார். இதன்போது தமது நிலைப்பாட்டை மூவரும் இவ்வாறு வெளிப்படுத்தினர்.

“தாம் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதையடுத்து விமானத்தினூடாக இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தோம்.

தாங்கள் மூவரும் தற்காலிக விசாவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பல மணிநேரம் விசாரணை மேற்கொண்டார்கள்.

அதன் பின்னரே அங்கிருந்து வெளியேற அனுமதித்தார்கள்” என கவலை வெளிப்படுத்தினர். இதேவேளை மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து வாழ்வதற்கு உதவிபுரியுங்கள் முருகன் தயவுகோர்ந்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த முருகன்

“தனது மனைவி ‘நளினி’ இந்திய பிரஜை ஆதலால் அவர் தமிழகத்தில் உள்ளார். சிறையில் பிறந்த தனது ஒரே மகள் புலம்பெயர்ந்து பிரிட்டிஷில் வாழ்ந்து வருகிறாள்.

நான் இலங்கைக்கு அனுப்பட்டதையடுத்து தாயாருடன் உள்ளேன். “தயவுசெய்து தமது விடுதலை சாத்தியமாவதற்கு உந்து சக்திகளாக இருந்து துணைபுரிந்த மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து வாழ்வதற்கு உதவிபுரியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

இத்தனை வருடங்கள் துன்பங்களை மட்டுமே அனுபவித்து நடைபிணங்கள் போன்று சிறைமீண்டுள்ள எம்மை இனிமேலாவது நிம்மதியாக வாழவிடுங்கள் என அவர்கள் மூவரும் வேண்டுகோள் விடுத்தனர்.

தமது விடுதலைக்காக பல்வேறு வழிகளிலும் போராடிய உலகவாழ் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் தமது வாழ்நாள் நன்றிகளை காணிக்கை செலுத்துவதாக அவர்கள் கண்ணீர் கசிந்தனர்.

இந்த தகவலை குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் கோமகன் செய்திக் குறிப்பொன்றின் மூலம் ஊடகங்களுக்கு அறியப்படுத்தினார்.