அரசியல் இலாபத்தை எதிர்பார்க்கிறாரா மைத்திரி?: கத்தோலிக்க திருச்சபை கேள்வி

0
56

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் அவசர அவசரமாக அறிக்கைகளை வெளியிட்டு அரசியல் இலாபத்தை எதிர்பார்க்கிறாரா? என கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்பியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைத்து அரசியல் இலாபத்தை தேட வேண்டாம் என கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு மாயையில் மக்கள் விழ மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் 90 வீதத்துக்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் மைத்திரிபால சிறிசேன கூறிய தகவல்கள் அவற்றில் வெளியாகியுள்ளனவா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்றைய தினம் அழைக்கப்பட்ட நிலையில் தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களின் பின்னர் தற்போது அவர் இவ்வாறு தெரிவிப்பது நாட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.