‘ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு’

0
47

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள திரையரங்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நான்கு முக்கிய சந்தேக நபர்கள் உட்பட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தாக்குதலில் உயிரிழந்த ஒருவரின் உறவினர்களுக்கு அந்நாட்டு பணத்தில் 3 மில்லியன் ரூபிள் மற்றும் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் 1 மில்லியன் ரூபிள் வழங்குவதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ISIS-K பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள கிராஸ்னோகோர்ஸ்கில் உள்ள திரையரங்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் போன்று உடையணிந்த நான்கு தாக்குதல்தாரிகள் இசை நிகழ்ச்சி நடைபெற்ற கட்டிடத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுகளை வீசியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ரோக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு சற்று முன்பு துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளது.

இசைக்குழு மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இசைக்குழு உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அப்போது 6,200 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் மக்கள் நிரம்பியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலுடன், இசை நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்திலும் தீ பரவியது.

15 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களில் குழந்தைகளும் உள்ளதுடன், “இந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகக் ரஷ்ய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தாக்குதலுக்கு வந்த ஆயுததாரிகள் பின்னர் வெள்ளை நிற காரில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.