தெற்கில் தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

0
57

தென் மாகாணத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஆகியோருக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காலி மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நேற்று (13.03.2024) சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இதன்போது, காலி மற்றும் எல்பிட்டிய பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் வைத்து இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குற்ற அறிக்கைப் பிரிவு, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு, சமூகப் பொலிஸ் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படை, புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் அழைத்து இக்குற்றங்களைத் தீர்ப்பதில் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும், எவ்வாறு தகவல்களைப் பரிமாறிக் கொள்வது என்பன தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விரைவில் வெளிக்கொணர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.