வெடுக்குநாறி சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது அரை நிர்வாணமாக தூக்கிச்செல்லப்பட்ட தமிழர்கள்..!

0
92

வெடுக்குநாறி மலையில் நேற்றிரவு இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது திடீரென நுழைந்த பொலிஸார் எட்டு பேரை கைது செய்து அரை நிர்வாணமாக தூக்கிச்சென்றதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலையில் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை நிகழ்வுகளை தடுத்து நிறுத்திய பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் இலங்கை பொலிஸார் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி தன்னிச்சையாக மனிதாபிமானமற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது எட்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அரை நிர்வாணமாக தூக்கிச்செல்லப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.

வெடுக்குநாறிமலையில் ஆலய நிர்வாகத்தினரால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜை நிகழ்வுகளில் எவ்வித தவறும் இல்லையென வவுனியா நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

இருப்பினும் நீதிமன்ற கட்டளையின்றி நீதிமன்ற உத்தரவினையும் மீறி பொலிஸார் தன்னிச்சையாக பல உத்தரவுகளை வெளியிட்டு அடாவடியாக செயற்பட்டு வருகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே அவர்கள் தொடர்பில் பல ஆதாரங்களையும், கைது செய்யப்பட்டமைக்கான பதிவுகளையும் பொலிஸார் தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.