உலக சாதனையாகப் பார்க்கப்பட்ட அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்களின் பயங்கர எச்சரிக்கை

0
78

தகுதியற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயிற்சி பெற்ற மருத்துவரின் தலையீடு இல்லாமல் தகுதிகள் அற்ற பல வைத்தியர்கள் இத்துறையில் பணியாற்றி வருவதாகவும் அச்சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில், உலக சாதனை நிகழ்த்தப்பட்டதாக செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.

அதாவது, அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் 62 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்த 13.5 லீட்டர் கொழுப்பை அகற்றியிருந்தார் என்ற செய்தி வெளியாகி வியப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த அறுவை சிகிச்சை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களின் சங்கம் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்கள்,

“இந்த மாதிரி அறுவை சிகிச்சையில் 8 லீட்டருக்கு மேல் கொழுப்பு அகற்றப்படமாட்டாது. காரணம் அது உயிருக்கு ஆபத்தானது.

அது இவ்வாறு கொழுப்பு குறைக்கப்படும் அறுவை சிகிச்சை அல்ல. அது உடல் வடிவத்தை மீண்டும் பெறும் சிகிச்சையாகும். குறித்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த நோயாளியின் நிலைமை மிகவும் மோசமாகி மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது” என சங்கத்தின் வைத்திய நிபுணர் கலாநிதி அமில ஷசங்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தகுதியற்ற வைத்தியர்களால் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை தொடர்பான ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு தௌிவுப்படுத்துவதற்காக குறித்த சங்கத்தின் வைத்திய நிபுணர் குழுவொன்று சந்திப்பென்றை நடத்தியிருந்தனர்.

இதன்போதே, அண்மையில் கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வயிற்றில் படிந்திருந்த 13.5 லீற்றர் கொழுப்பை அகற்றும் சத்திரசிகிச்சையானது உயிருக்கு ஆபத்தான சத்திரசிகிச்சை என வெளிப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.