ஜிமெயில் சேவையை கூகுள் நிறுத்துகிறதா.. தீயாய் பரவிய தகவல்!

0
143

கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையை நிறுத்தப்போவதாகவும், இது தொடர்பாக பயனர்களுக்கு செய்தி அனுப்பியிருப்பதாகவும், எக்ஸ் வலைதளத்தில் கடந்த இரண்டு நாட்களாக தகவல் பரவுகிறது.

பயனர்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

அதில், “அன்புள்ள ஜிமெயில் பயனரே, ஜிமெயில் அதிகாரபூர்வமாக சேவையை நிறுத்தி அஸ்தமனமாகும். அதன்பிறகு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல்கள் அனுப்பவோ, பெறவோ, சேமிக்கவோ முடியாது” என கூறப்பட்டிருந்தது.

இந்த தகவலை எக்ஸ் தளத்தில் பார்த்த ஜிமெயில் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் கணக்கில் வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அழிந்துவிடுமோ? என்று பயந்தன.

இது கூகுள் நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றதும், உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜிமெயிலின் அஸ்தமனம் பற்றிய தகவல் தவறானது என்று கூகுள் கூறியுள்ளது. 

எனவே, கூகுள் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலை நிறுத்தாது என்பது உறுதியாகியிருக்கிறது. மின்னஞ்சல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை அறிந்த பயனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.