ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக துபாயில் அமைந்துள்ள உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் இந்தியாவின் மூவர்ண கொடி செவ்வாய்க்கிழமை ஒளிரவிடப்பட்டது.
துபாயில் நடைபெறும் ‘உலக அரசாங்க மாநாடு 2024-இல்’ சிறப்பு விருந்தினராக பங்கேற்க 2 நாள் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு பிரதமர் மோடி சென்றார்.
அந்நாட்டு அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யானுடனான பிரதமரின் பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் இடையே 10 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கும்விதமாக அந்நாட்டில் உள்ள உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் இந்தியாவின் மூவர்ண கொடி செவ்வாய்க்கிழமை இரவு ஒளிரவிடப்பட்டது. மேலும் ‘இந்திய குடியரசின் சிறப்பு விருந்தினரே வருக! வருக!’ என்ற வாசகமும் அதில் இடம்பெற்றிருந்தது.
இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தௌம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நிகழாண்டு உலக அரசாங்க மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்திய குடியரசின் சிறப்பு விருந்தினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்கிறோம்.
நமது நாடுகளுக்கிடையே உள்ள வலுவான உறவுகள் சர்வதேச ஒத்துழைப்புக்கு முன்மாதிரியாக விளங்குகின்றன’ எனக் குறிப்பிட்டிருந்தார்.