வைத்தியரை கடத்திச் சென்று 40 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்ட ஆசிரியர்!

0
145

மிட்டியாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு வைத்தியர் ஒருவரை கடத்திச் சென்று 40 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் மிட்டியாகொட பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபர் என ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கடத்தப்பட்டவர் பதுளை பிரதேசத்தில் உள்ள வைத்தியராவார்.

கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தல்

சந்தேக நபரான மேலதிக வகுப்பு ஆசிரியர் குறித்த வைத்தியரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிட்டியாகொட பிரதேசத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு அவரை பலாத்காரமாக காரில் ஏற்றிச்சென்று மிட்டியாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் இரண்டு நாட்களாக தடுத்து வைத்துள்ளார்.

அதோடு, தான் இதுவரை மூவரை கொலை செய்துள்ளதாகவும் தான் கோரும் 40 இலட்சம் ரூபாய் பணத்தை உரிய கால அவகாசத்திற்குள் செலுத்தாவிடில் உங்களையும் கொலை செய்து விடுவதாக வைத்தியரிடம் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட வைத்தியருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைவதற்கு 4 மணித்தியாலங்கள் இருந்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.