தாயகத்திற்கு அழைத்து வரப்படும் சாந்தன்: இணக்கம் தெரிவித்த ரணில்

0
139

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை அவரது சொந்த ஊரான யாழிற்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்துள்ளார்.

இதன்போதே சாந்தனை அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

இந்நிலையில், சாந்தனை தாயத்திற்கு அழைத்துவருவது தொடர்பாக அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சாந்தனின் தாயார் சந்தித்திருந்தார். இதன்போது சாந்தனை தாயகத்திற்கு அழைத்துவர சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், விடுதலை செய்யப்பட்ட சாந்தனை அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுடன் சென்று சந்தித்து விளக்கமளித்தபோது சாந்தனை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

சாந்தனின் தாயாரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களிடமிருந்தும் கோரிக்கை கடிதமொன்றை வழங்குமாறும் ரணில் கேட்டுக்கொண்டதாக சிறீதரன் ஊடகவியலாளரிடம் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது சாந்தனை தாயகத்திற்கு அழைத்துவர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.