இந்திய கிரிக்கெட் அணி ஆடுகளத்தை தயார் செய்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
2வது டெஸ்ட்
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ம் திகதி தொடங்கவுள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் அதிக கவனத்துடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை தயார் செய்வதில் இந்திய அணி நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளிதரன் போல் செயல்படும் ஜோ ரூட்
அத்துடன் நாம் சிறப்பான ஆடுகளத்தை தயார் செய்தால் அது இங்கிலாந்து அணிக்கே சாதகமாக அமையும், இந்திய அணியில் சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர் ஆகிய வீரர்கள் நல்ல பார்மில் இல்லை.
அதைப்போல விராட் கோலி, கே.எல் ராகுல், ஜடேஜா போன்ற முக்கிய வீரர்களும் இந்திய அணியில் இல்லை, எனவே சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானத்தை தயார் செய்தால் அது நமக்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை துல்லியமான பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது தான் உண்மை, ஆனால் பிசன் பேடி போல டாம் கார்ட்லியும், முத்தையா முரளிதரன் போல ஜோ ரூட் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.