போதைப்பழக்கத்தால் நண்பரை 108 முறை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணுக்கு 100 மணி நேர சமூக சேவை செய்ய உத்தரவிட்ட நீதிபதி.
கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பெண் பிரின் ஸ்பெசர் (Bryn Spejcher). பிரின், “அக்கவுன்டன்ட்” பணியில் இருந்த சாட் ஒமேலியா (Chad O’Melia) எனும் 26-வயது ஆண் நண்பரை அடிக்கடி சந்தித்து வந்தார். பிரின் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்.
2018 மே மாதம் தனது ஆண் நண்பர் ஒமேலியாவை சந்திக்க பிரின் சென்றார். அப்போது பிரின் மரிஜுவானா எனும் போதை பொருளை பயன்படுத்தினார். அதில் அவர் தனது சுயகட்டுப்பாட்டை இழந்தார்.
108 முறை கத்தியால் குத்தி கொலை
அந்நிலையில் அவருக்கு ஒமேலியாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்திலும் போதை மருந்தின் மயக்கத்திலும் என்ன செய்கிறோம் என்பதை அறியாத பிரின், ஒமேலியாவை ஒரு கத்தியால் 108 முறை கத்தியால் குத்தினார்.
இதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் ஒமேலியா. தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது உடல் முழுவதும் ரத்தத்துடன் கையில் கத்தியை பிடித்தவாறு அழுது கொண்டே இருந்தார் பிரின்.
காவல்துறையினர் அவரை பிடிக்க முற்பட்ட போது தனது கையில் இருந்த கத்தியால் தன் கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக காவல் அதிகாரிகள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
வழக்கு விசாரணை
ஒமேலியாவை மட்டுமின்றி தனது நாயையும் குத்தி கொன்றார் பிரின் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் பிரின் தரப்பு வழக்கறிஞர்கள் போதை மருந்தின் தாக்கத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் அவர் கொலை செய்து விட்டதாக வாதிட்டனர்.
இந்நிலையில் வென்சுரா கவுன்டி நீதிமன்ற நீதிபதி டேவிட் வோர்லி, பிரின் தனது செயலிலும் எண்ணத்திலும் கட்டுப்பாடே இல்லாமல் இந்த கொலையை செய்துள்ளதால் அவருக்கு சிறை தண்டனை வழங்காமல் 2 வருட “ப்ரொபேஷன்” (ஒரு நன்னடத்தை கண்காணிப்பு அதிகாரியின் மேற்பார்வையில் வாழுதல்) மற்றும் 100 மணி நேரம் சமூக சேவை புரியவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தில் சாட் ஒமேலியாவின் தந்தை ஷான் ஒமேலியாவிடம் அழுது கொண்டே மன்னிப்பு கேட்டார் பிரின். ஆனால் இத்தீர்ப்பு குறித்து ஷான் “நீதிபதி தனது தீர்ப்பின் மூலம் மரிஜுவானா புகைப்பதற்கு அனைவருக்கும் உரிமம வழங்கி விட்டார்” என கோபத்துடன் தெரிவித்தார்.