அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024: திடீரென விலகலை அறிவித்த விவேக் ராமசாமி

0
170

2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்தே ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“நான் இன்றிரவு இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். இது கடுமையாகவே இருக்கிறது. ஆனாலும் ஏற்கிறேன். இன்று மக்களை ஆச்சரியப்படுத்தும் முடிவை எதிர்பார்த்தோம். அது கிட்டவில்லை” என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது.

இதில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் காகஸ் என்ற மாகாண அளவிலான உள்கட்சி தேர்தல் தொடங்கியது. இத்தேர்தல் பாரம்பரியமாக அயோவா மாகாணத்தில் இருந்து தொடங்கப்பட்டது. நேற்று நடந்த இத்தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

51.9 சதவீத வாக்குகளுடன் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். ப்ளோரிடா ஆளுநர் ரான் டேசாண்டிஸ் 20.7 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி 19 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

தொடர்ந்து விவேக் ராமசாமி 7.7 சதவீத வாக்குகளும், அர்கான்ஸஸ் முன்னாள் ஆளுநர் அஸா ஹட்ஷின்சன் 0.2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்தே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

ஐயோவா மாகாண உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், இந்த அறிவிப்பை விவேக் ராமசாமி வெளியிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு தருவதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.