இலங்கை – ஜிம்பாப்வே 3வது ஒருநாள்: இலவச நுழைவு

0
161

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெறவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணியானது இலங்கையுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலாவதாக ஆரம்பமாகியுள்ள ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. பின்னர் கடந்த திங்கட்கிழமை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியானது 2 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் அதே மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் இலங்கை காத்துக் கொண்டுள்ளது. அதேநேரம் சிம்பாப்வே அணியும் பதிலடி கொடுத்து தொடரை 1:1 என்ற கணக்கில் நிறைவுக்கு கொண்டு வரும் நோக்குடன் உள்ளது.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதன்படி, இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியை பொது மக்கள் இலவசமாக பார்வையிடலாம் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நேற்று மாலை அறிவிப்பொன்றை வெளியிட்டது.

இந்த அறிவிப்புக்கு அமைவாக மைதானத்தின் சி, டி தளங்களின் மேல் மற்றும் கீழ் நிலைகளுக்கு ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். குறித்த தளங்களுக்கான நுழைவு வாயில்கள் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு திறக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Oruvan