இலங்கை குரங்குகளை வாங்க இப்போதும் ஆர்வம் காட்டும் சீனா – மஹிந்த அமரவீர

0
138

இலங்கையில் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்வதில் சீனா இப்போதும் ஆர்வமாக இருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தனது சமீபத்திய சீன விஜயத்தின் போது, தனியார் மிருகக்காட்சிசாலை நிறுவனங்கள் இலங்கைக் குரங்குகளைப் பெறுவதற்கான நம்பிக்கையை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“தனியார் சீன மிருகக்காட்சிசாலை நிறுவனங்கள் இன்னும் கண்காட்சி நோக்கங்களுக்காக இலங்கை குரங்குகளைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளன.

சீனாவில் சுமார் 20,000 தனியார் உயிரியல் பூங்காக்கள் உள்ளன. இருப்பினும், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் நடவடிக்கைகளால் எங்களால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியவில்லை.

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடத்திற்கு ஏறக்குறைய 700 மில்லியன் தேங்காய்கள் உட்பட பயிர்கள் அழிவதற்கு குரங்குகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. பயிர் அழிவை நிவர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் இப்போது ஆராய வேண்டும் என்றார்.

வன விலங்குகளால் பயிர்களை நாசமாகுவதை தடுப்பதற்கான தீர்வை வழங்குமாறு பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சுகளுக்கு அமைச்சர் பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.