பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு: பிரதிவாதிகளை விடுவித்த யாழ். நீதவான் நீதிமன்றம்

0
125

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்துகொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெற்ற பேரணியில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஏழு பேரே குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

Oruvan

இந்நிலையில் குறித்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துகொள்ளப்பட்டது.

வழக்கு தொடர்பாக பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், பிரதிவாதிகள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட்டு குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குறித்த வழக்கை கிடப்பில் போட்ட நீதிமன்றம் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

Oruvan