தென் கொரியா மீது வட கொரியா திடீர் தாக்குதல்: போர் மூளும் அபாயம்

0
126

தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியதையடுத்து போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், 200 இற்க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி வட கொரியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எதிர்பாராத இந்த தாக்குதலால் யோன்பியோங் தீவில் உள்ள மக்கள் உடனே வெளியேற தென் கொரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தாக்குதலால் பொதுமக்களுக்கோ அல்லது தென் கொரிய இராணுவத்துக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

தென் கொரிய கூட்டுப் படைத் தலைவர்களின் செய்தித் தொடர்பாளர் இந்த தாக்குதல் தொடர்பாக தெரிவிக்கையில்,

“இது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து அமைதியை குலைக்கும் ஆத்திரமூட்டும் செயல்” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா – வட கொரியா இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்ட தென் கொரியா அண்மையில் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சி மேற்கொண்டது. இந்த போர்ப்பயிற்சி நடைபெற்ற சில நாட்களில் வட கொரியா தற்போது தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.