கர்வத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன் – இளையராஜா!

0
131

கர்வத்தில் இருந்து தாம் விடுபட்டு விட்டதாக இசை அமைப்பாளர் இளையராஜா கூறி உள்ளார். அதே நேரத்தில், உலகிலேயே 3 நாட்களில் 3 படங்களுக்கு பின்னணி இசை அமைத்த ஒரே நபர் தாம்தான் என்றும், சிலருக்கு இசையமைக்க தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசை அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, தாம் சிவ பக்தர் என்றாலும், வைணவத்துக்கு எதிரி அல்ல என்றார். திவ்யபிரபந்தத்தை ஒலிப்பதிவு செய்து வைத்துள்ளதாகவும், சரியான தருணத்தில் அதனை வெளியிடுவேன் எனவும் கூறினார்.

கர்நாடக இசையில் தாம் கரை கண்டவன் அல்ல என்றும், மக்கள் தம்மை இசைஞானி என்று அழைப்பதற்கு தகுதியானவனா என்பது கேள்விக்குறிதான் எனவும் கூறினார். தமக்கு எந்த கர்வமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  தற்போதைய இசையமைப்பாளர்களில் சிலர் பாடல் பதிவு செய்ய அதிக காலம் எடுத்துக்கொள்வதாக கூறிய இளையராஜா, நெருக்கடி காரணமாக 3 நாட்களில் 3 படங்களுக்கு பின்னணி இசை அமைத்ததாகவும், அப்படி இசையமைத்தவர்கள் உலகிலேயே கிடையாது என்றும் கூறினார்.

தமக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ கிடையாது என்றும் அவர் பேசினார். எந்த புகழ் மொழியும், எந்த பாராட்டுகளும் தம்மை சிந்திக்க வைக்காது என்று கூறிய இளையராஜா, திருவண்ணாமலையில் காட்டுப்பாதையில் கிரிவலம் செல்வதையே வழக்கமாக கொண்டிருந்ததையும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.