ஈழத்திற்காக போராடிய கறுப்பு நிலா விஜயகாந்த் : பலரும் அறியாத பல விடயங்கள்

0
293

தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

அவரின் மரணம் தமிழகத்தில் மட்டுமன்றி தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தியாக மாறியுள்ளது.

ஈழத்தமிழர்கள் மீது அதீத அன்பு கொண்ட விஜயகாந்த பல்வேறு உதவிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளார்.

1983ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்டன. பல அப்பாவிகள் காடையர்களால் கொல்லப்பட்டனர்.

தமிழகத்தில் போராட்டம்
இதன்போது முதன்முறையாக திரையுலக கலைஞராக விஜயகாந்த் தமிழகத்தில் போராட்டம் நடத்தி எதிர்ப்பை வெளியிட்டார். அன்றிலிருந்து தமிழர்கள் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை, அன்றைய காலகட்டங்களில் ஈழ விடுதலைக்கான போராட்டங்கள் குழுக்கள் பல செயற்பட்டன. அவர்கள் நிதியுதவி வேண்டிச் சென்ற வேளையில் பெருந்தொகை பணத்தை வாரிய வழங்கியதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

1984 ஆண்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை விளக்கி, சென்னை ஆதரவு கோரும் வகையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மறைந்த விஜயந்காந்த பெரும் உதவிகளை புரிந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நிதி உதவி

அன்றைய காலகட்டங்களில் சென்னை வீதிகளில் உண்டியல் குலுக்கினோம். தொழிற்சாலைகள், வர்த்தக நிலையங்கள்,வீடுகளில் நிதி சேகரிப்பிலும் போராளிகள் ஈடுபட்டனர்

இந்நிலையில் புரட்சி நடிகர் விஜயகாந்த் வீட்டுக்கும் செல்கிறோம். எங்களை அவர் பேசவிடவில்லை. இராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் “ஊமை விழிகள்” திரைப்பட ஒரு காட்சிக்கான வசூல் முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

ஒவ்வொரு ஒற்றை ரூபாய்க்கும் உண்டியல் குலுக்கிய எங்கள் மனங்களில் அந்த மகான் நிறைந்து நின்கின்றார் என தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் நடந்த இனக்கலவரத்தை அடிப்படையாக கொண்டு தமிழர்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அவர் நடித்த படமொன்றில் பாடலை உருவாக்கினார்.

தோல்வி நிலையென நினைத்தால்
மிகவும் வெற்றிகரமாக ஓடிய ஊமை விழிகள் என்ற திரைப்படத்தில் “தோல்வி நிலையென நினைத்தால் ” என்ற பாடல் ஈழத்தமிழர்களுக்காகவே உருவாக்கப்பட்டதாகும். இந்தப் பாடல் இப்போதும் தமிழர்களின் வாழ்வியலுடன் ஒன்றிய அடையாளப்பாடலாக மாறியுள்ளது.

அதேவேளை, ஈழப்போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கிய அவர் ஈழம் கிடைக்கும் வரை தான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்ற விஜயகாந்த் முடிவை எடுத்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மீது அதீத அன்பு கொண்ட விஜயகாந்த், தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர்வைத்தவர்.

இலங்கையிலிருந்து அகதிகளாக சென்ற ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு மூன்று வேளையும் உணவளித்துள்ளார்.

நடிகர் என்ற நிலை மாறிய அரசியல் கட்சியின் தலைவராக செயற்பட்ட காலகட்டங்களில், ஈழதமிழர்கள் தொடர்பில் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியை பகிரங்கமாக கடுமையாக சாடியிருந்தார்.

ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட கருணாநிதி தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.