ஜனாதிபதி தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவு ரணிலுக்கே: அமைச்சர் டக்ளஸ்

0
128

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு வழங்கும் என கடல்தொழில் அமைச்சரும் அக்கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்சபை ஒன்றுகூடலில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்; ”எதிர்வரும் வருடம் இறுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என நினைக்கிறேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

ஏனெனில் எமது நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த போது, அதே நேரம் வன்முறைகள் தலைதூக்கியப் போதும் எவரும் முன் வந்து நாட்டை பொறுப்பெடுக்க தயங்கினர். ஆனால், ஜனாதிபதி ரணில் தைரியத்தோடும் நம்பிக்கையோடும் முன் வந்தவர்.

அவர் பிரேக் இல்லாத பேருந்து ஒன்றையே எடுத்திருந்தார். இன்று ஓரளவு எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டன. எனவே அவரோடு பயணிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். தமிழ் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்பு என்பது இந்த நாட்டில் இல்லை.

ஆகவே, தென்னிலங்கையில் வென்று வரக்கூடிய ஒரு வேட்பாளரை நாட்டை வழிநடத்தக்கூடிய வகையில் நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒருவருடனேயே நாம் பயணிக்க வேண்டும். அவருடனேயே நாம் பேசவும் வேண்டும்.

தமிழ் வேட்பாளர் என்பதெல்லாம் ஒரு பூச்சாண்டி கதைகளும் பயனற்ற விடயங்களும் ஆகும். அதை நாம் ஒரு கருத்தாகவே எடுத்துக் கொள்ளவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.