ஜனவரி 25 ஆம் திகதி தைப்பூசத் திருவிழா: சிங்கப்பூரின் இரண்டு கோயில்கள் கூட்டாக அறிவிப்பு

0
159

சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா ஜனவரி மாதம் 25 ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படும் என்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலும் கூட்டாக அறிவித்துள்ளன.

காவடி, பால்குடம் போன்ற பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்த சிராங்கூன் ரோட்டிலுள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு, தேங் ரோட்டில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கு பாத யாத்திரையாகச் செல்வார்கள்.

நேர்த்திக்கடன்களைச் செலுத்தும் பக்தர்களின் முதல் பகுதியினர் ஜனவரி 24ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்படுவார்கள். தைப்பூசத் தினம் இரவு 11 மணிக்கெல்லாம் பக்தர்கள் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலைச் சென்றடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தைப்பூசத் திருவிழா தொடர்பான அனைத்து விவரங்களும் https://thaipusam.sg/ எனும் இணையப் பக்கத்தில் உள்ளன. நேர்த்திக்கடன்களுக்கான அனைத்து முன்பதிவுகளும் இணையத்தின் மூலமே செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

சொந்தமாகத் தயாரிக்கப்படும் பால்குடம், பால் காவடி, தொட்டில் காவடி ஆகியவற்றுக்கான முன்பதிவு டிசம்பர் 10ஆம் திகதி தொடங்கிவிட்டது. முதியோர், உடற்குறையுள்ளவர்களுக்கான கோயிலில் தயாரிக்கப்படும் பால்குடங்களுக்கான டிக்கெட்டுகளை அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் மட்டும் வாங்கிக் கொள்ளலாம்.

அலகுக் காவடி, ரதக் காவடி ஆகியவற்றுக்கான முன்பதிவுகளை இணையத்தில் டிசம்பர் 16ஆம் திகதியிலிருந்து செய்துகொள்ளலாம்.

காவடி எடுப்போர், திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும் பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் அதிகாரிகள் தங்கள் விவரங்களைச் சரிபார்க்க ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு நேரடியாக வர வேண்டும்.

பாத ஊர்வலப் பாதையில் நேரடியாக இசை வழங்கும் இடங்கள் மூன்றிலிருந்து ஐந்துக்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஹேஸ்டிங்ஸ் ரோடு, ஷார்ட் ஸ்திரீட், சிலிகி செண்டருக்கு எதிர்புறம், கேத்தே கிரீன், கிளமென்சியூ அவென்யூ ஆகியவையே அந்த ஐந்து இடங்கள்.

பாத ஊர்வலப் நடைபாதை நெடுகிலும் உள்ள தண்ணீர் பந்தல்களில் தைப்பூசத் தினத்தன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பக்திப் பாடல்களை ஒலிக்கச் செய்யலாம்.

சம்பந்தப்பட்ட இரு கோயில்களிலும் தைப்பூச ஊர்வலப் பாதை நெடுகிலும் பொதுமக்கள் மது அருந்துதலையும் புகைபிடித்தலையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.