ஜனாதிபதிக்கு தேர்தல் வருத்தம் இருக்கிறது – சிறீதரன் எம்.பி

0
149

ஜனாதிபதிக்கு தேர்தல் வருத்தம் இருக்கின்றது. ஆனால் தேர்தல் நடக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் தலைவருக்காக போட்டியிடவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் நடக்கும் என்று சொல்வது ஜனாதிபதிக்கு ஒரு வருத்தமாக இருக்கிறது. அவர் இவ்வாறு கூறி தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள பார்க்கின்றார்.

ஆனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அரசியலமைப்பின் பிரகாரம் அவர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். அதை நடத்தினால் தான் அவர் ஏனைய தேர்தல்களைப் பற்றி சிந்திக்க முடியும். ஆனால் அவர் தேர்தலை நடத்த பயப்படும் நிலைமை காணப்படுகிறது.

தேர்தலை என்றாலே விசர் நாய் தண்ணீரை கண்டது போல் பயப்படுகின்றார். ஆகவே அவர் தேர்தலை நடத்தவே மாட்டார். எதிர்வரும் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேர்தல் ஒன்றினை நடத்தியாக வேண்டும்.

அதன்பின் யார் ஜனாதிபதியாக வருகின்றார்களோ அவர் தேர்தலை பற்றி யோசிப்பார். ஆகவே இலங்கையில் தற்போதைக்கு வேறு தேர்தல்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. ஏதேனும் அதிசயங்கள் அல்லது அழுத்தங்கள் இடம்பெற்றால் மாத்திரமே தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கூட்டமைப்புக்குள் இருந்து ஏனைய கட்சிகள் வெளியேறி இருந்தன. ஆகவே, தாங்கள் தமிழரசுக் கட்சியினுடைய தலைவராக  பொறுப்பு ஏற்றுக்கொண்டால் ஏனைய கட்சிகளை ஒன்றிணைப்பீர்களா? 

இணைந்த வடக்கு கிழக்கு  பிராந்தியரீதியாக செயல்படும் மிகப்பெரும் பேரியக்கம் எமது தமிழரசுக் கட்சியாக காணப்படுகிறது. தமிழரசு கட்சியினுடைய காலச் சூழலில் அது புதிய தலைவர்களை அறிமுகம் செய்திருக்கிறது. தலைவர்களை இயற்கையும் காலமும் கொண்டு வருகின்றது.

ஆகவே இது ஒரு விவேகமான ஒரு உள்ளக தேர்தலாக காணப்படுகிறது. எனது ஆளுமைக்கும் எனக்குள்ள ஆற்றலுக்கும் ஏற்றார் போல் ஏனைய எல்லோரையும் கூட்டாக அரவணைத்து தமிழரசுக் கட்சியை கட்டி வளர்ப்பதோடு ஏனைய கட்சிகளோடும் நல்லுறவைப் பேணி தமிழ் தேசிய விடுதலைக்காக பயணத்தை முன்னெடுப்போம்.

ஏனைய கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதானது தற்போதைய காலத்தின் கட்டாயமாக உணரப்படுகிறது. நாங்கள் அதனை நிராகரிக்கவில்லை. அது தமிழ் மக்களுக்கான தேவையாக இருக்கிறது. அந்த ஒற்றுமைக்காக என்னென்ன விட்டுக்கொடுப்புகளை செய்ய முடியுமோ என்ன விடயங்களில் சேர்ந்து போவது என்பது தொடர்பிலும் கதைத்து அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.