துவாரகாவின் பெயரில் வெளியான உரையில் உண்மை இருக்குமாயின் வரவேற்போம் – சிறீரங்கேஸ்வரன்

0
169

ஆண்டுதோறும் கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றிக் கொண்டிருக்காமல் கனவுகளை சுமந்த மக்களுக்காகவும் எமது மண்ணில் நிரந்தர ஒளியை ஏற்ற வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதற்காகவே நாம் முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“உரிமைப் போராட்டத்திலும் அழிவு யுத்தத்திலும் உயிர் நீத்த அனைத்து இயக்கங்களின் போராளிகளுக்கும் மக்களுக்கும் நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவர்கள் என்னென்ன கனவுகளை எண்ணி உயிர் நீத்தார்களோ அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் ஒன்றாக எண்ணி ஒளியேற்ற வேண்டும்.

அது மாத்திரமல்லாது குறித்த காலப்பகதியில் உயிர் நீத்த மக்களின் கனவுகளையும் மாறா வடுக்களையும் இன்றும் சுமந்தவாறு வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகளின் வாழ்வும் சிறப்பானதாக அமைவதற்கு ஏற்றவகையில் நிரந்தர ஒளி ஏற்றப்பட வேண்டும்.

நாட்டை அச்சுறுத்தி வந்த அழிவு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சுமார் 12 ஆயிரத்து ஐநூற்று 22 க்கு மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற்று பொதுவாழ்வில் ஈடுபட்டவருகின்றனர். அவர்களது விடுதலையில் நாம் கணிசமான பங்காற்றியுள்ளளோம்.

ஆனாலும், அவர்களது வாழ்வாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோன்று உரிமைப் போராட்டத்தில் இணைந்து போராடிய அனைத்து இயக்க போராளிகளின் வாழ்வியலும் ஏதோ ஒரு வகையில் பின்னடைவாகவே இருந்துவருகின்றது.

அவ்வாறு வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்து இயக்க போராளிகளுக்கும் அவர்களின் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியில் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக விசேட நிதி ஒதுக்கீட்டை ஜனாதிபதியிடம் கோரவுள்ளோம்.

குறிப்பாக யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு விஷேட நிதி ஒதுக்கீடு உள்ளது போல அழிவு யுத்தத்தில் உயிர் நீத்த அல்லது நிரந்தர பாதிப்புகளை சந்தித்துள்ள அனைத்து இயக்க போராளிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யுமாறே ஜனாதிபதியிடம் கோரவுள்ளோம்.

இதேவேளை எமது இனத்தின் உரிமைக்கான யுத்தத்தில் உயிர் நீத்த அனைத்து இயக்க போராளிகளினதும் நினைவாக பொதுத் தினம் ஒன்றை அங்கிகரிக்குமாறு தலைவர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஊடாக அங்கிகாரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

பெரும் விவாதத்தின் பின்னர் பாராளுமன்றம் அதற்கு அங்கீகாரமும் வழங்கியுள்ளது. ஆனாலும் பின்னர் ஏற்பட்ட கொரோனா தாக்கங்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் ஆட்சி மாற்றங்கள் காரணமாக அந்த பிரேரணை நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து இயக்க போராளிகள் பொதுமக்களை நினைவு கூரும் பொதுத் தினத்தை செயற்படுத்த சமூகத்திலுள்ள புத்திஜீவிகள் சமூக அக்கறையாளர்கள் சமயத் தலைவர்கள் என அனைவரும்பங்காற்ற வேண்டும்.

அதனூடாக கல்லறைகளுக்கு மட்டும் தொடர்ச்சியாக ஒளியேற்றிக் கொண்டிருக்காமல் கனவுகளை சுமந்த மக்களுக்காகவும் எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்ற அனைவரும் முன்வரவேண்டும்.” எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.