விடுதலை புலிகளின் இராணுவ உபகரணங்களை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

0
128

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு பொலிஸின் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தில் தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் கடந்த 19 ஆம் திகதி வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதியின் அனுமதியுடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் ஆகியோரின் பிரசன்னத்துடன் நேற்று (23) காலை 9 மணிக்கு குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்று வந்தன.

கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட போது நிலத்திலிருந்து நீர் வருவதை அவதானிக்க முடிந்துள்ளது. இருந்தும் தொடர்ச்சியாக குறித்த இடத்தினை அகழ்வு பணி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

குறித்த பகுதிக்கு அண்மையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் எதுவும் மீட்கப்படாத நிலையில் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.