காலநிலை மாற்றத்தால் மனித குலத்திற்கு பெரும் ஆபத்து – சர்வதேச நிபுணர் குழு எச்சரிக்கை

0
161

பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மனித குலத்தின் ஆரோக்கியம் பெரும் ஆபத்தாக மாறும் என சர்வதேச நிபுணர்கள் குழு  எச்சரித்துள்ளது.

கடும் வெப்பத்தால் 2050ஆம் ஆண்டுக்குள் உலகெங்கும் இப்போதுடன் ஒப்பிடுகையில், சுமார் 5 மடங்கு அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதென அனைத்துலக நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தி லான்செட் கவுண்ட்டவுன் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் வருடாந்திர மதிப்பீட்டின்படி,  சுற்றுப்புறத்துக்கு மாசு ஏற்படுத்தும் எரிபொருள்கள் தொடர்ந்து அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

மக்களின் சுகாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல அம்சங்களில் அவற்றால் உண்டாகும் கடும் வெப்பமும் ஒன்று எனக் குழு தெரிவித்தது.

அதிக வறட்சி காரணமாக மில்லியன் கணக்கானோர் பசிபட்டினியால் வாட நேரிடலாம்; கட்டுக்கடங்காத கொசுப் பரவல், தொற்று நோய்களை அதிகரிக்கக்கூடும். அவற்றால் சுகாதாரக் கட்டமைப்பு கடும் நெருக்குதலுக்கு உள்ளாகும் என்று அறிக்கை சுட்டியது.

இந்த ஆண்டு மானுட வரலாற்றில் ஆக வெப்பமான ஆண்டாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அறிக்கை வெளிவந்துள்ளது.