தங்களிடம் பணயக்கைதிகளாக உள்ளவர்களை பயன்படுத்தி இஸ்ரேலிலும் வெளிநாடுகளிலும் சிறையில் உள்ள தனது அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
அசோசியேட்டட் பிரசிற்கு கருத்து தெரிவித்த பெய்ரூட்டில் உள்ள ஹமாஸின் உறுப்பினர் அலி பரேகே நீண்டகாலத்திற்கு பயன்படுத்தக்கூடிய அளவிற்கு எங்களிடம் ரொக்கட்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இந்த யுத்ததிற்கும் எல்லா சூழ்நிலைகளைஎதிர்கொள்ளவும் எங்களை நன்றாக தயார்படுத்தியுள்ளோம்,நீண்ட கால யுத்தத்திற்கும் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாசின் நெருங்கிய சகாக்களிற்கு கூட தெரியாது
அத்துடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க சிறையில் உள்ள தங்கள் உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கு தற்போது பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களை பயன்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காசாவில் உள்ள முக்கிய தளபதிகள் சிலருக்கு மாத்திரம் இந்த தாக்குதல் குறித்து தெரிந்திருந்தது. ஹமாசின் நெருங்கிய சகாக்களிற்கு கூட தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், ஈரானின் பாதுகாப்பு படையினர் தாக்குதலிற்கு உதவினார்கள் என தெரிவிக்கப்படுவதையும் நிராகரித்துள்ளார்.
அத்துடன் காசா மீது நீண்டகால யுத்தம் திணிக்கப்பட்டால் ஹமாசின் சகாக்களாக ஹெஸ்புல்லா ஈரான் போன்றவர்கள் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் இவ்வளவு தூரம் வெற்றியடைந்தது என்பது ஹமாசிற்கே ஆச்சரியமளித்துள்ள கூறிய அவர், இஸ்ரேல் தாக்குதலை தடுக்கும் கட்டுப்படுத்தும் என எதிர்பார்த்தோம்; அவர்களின் பெரும் வீழ்ச்சி குறித்து நாங்களே பெரும் ஆச்சரியமடைந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தாங்கள் சிறிய வெற்றியை பெற்று பணயக்கைதிகளை பிடிக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்த அவர், இஸ்ரேல் இராணுவம் ஒரு காகிதப்புலி எனவும் குறிப்பிட்டுள்ளார்.