விடுதியில் சிறுமி மரணம் – மருந்து கொடுத்ததாக பாட்டி வாக்குமூலம்

0
183

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆபத்தை ஏற்படுத்தும் மருந்து வழங்கப்பட்டு கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியின் பாட்டியிடம் நேற்று மாலை கோப்பாய் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதனடிப்படையில் சிறுமியின் சடலம் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது ஆபத்தை ஏற்படுத்தும் மருந்து வழங்கப்பட்டு கொல்லப்பட்டமை தெரியவந்தது.

மேலும் விடுதியிலிருந்து மீட்கப்பட்ட கடிதத்தில்,

“தனக்கு கடுமையாக உளச்சிக்கல் உள்ளதாகவும் சாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாகவும் தான் இறந்த பின்னர் எனது பேத்தி தனிமையில் கஷ்டப்படுவார் என்பதால் இருவரும் சாக எண்ணினோம்.

எமது மரணத்திற்கு யாரும் பொறுப்பில்லை. எங்கள் சடலங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம் வைத்தியசாலை ஊடாகவே அடக்கம் செய்யவும்“ என அந்த கடிதத்தில் குறித்த பெண் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய அக்கடிதத்தின் அடிப்படையில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும், பேத்தியும் தங்கியிருந்துள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த பாட்டியும் அவரது பேத்தியான சிறுமியும் வாடகைக்கு அறை எடுத்து கடந்த சில நாட்களாக அங்கு தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் திருகோணமலையில் இருந்து வைத்தியரிடம் சிகிச்சை பெறுவதற்காக யாழ். வந்ததாகவும் குறித்த பாட்டி ஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இவர்கள் ஒரு தடவை மாத்திரமே ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் முகாமையாளர் கோப்பாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அறையை திறந்து பார்த்த போது, சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சிறுமி உயிரிழந்து 03 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை, சிறுமியின் பாட்டி அருகில் இருந்த கட்டிலில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர்.

குறித்த அறையில் பாட்டியால் எழுதப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கடிதமொன்று கிடைத்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் தாம் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடிதம் தொடர்பில் சந்தேகம் இருப்பதால் கடிதத்தை அடிப்படையாக கொண்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.