சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இலங்கை – யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தர்மன் சண்முகரத்னத்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்திருந்தார்.
இதையடுத்து புது அதிபர் தேர்தலுக்கான போட்டியில் தர்மன் சண்முகரத்னம் 66, சீன வம்சாவளிகளான இங் கொக் செங் 76, டான் கின் லியான் 75, ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழில் பேசி ஓட்டு சேகரிப்பு
நாளை அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வேட்பாளர்கள் நேற்று உச்சக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதன்போது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழில் பேசி அவர்கள் ஓட்டு சேகரித்தனர்.
பிரசாரத்தின் ஒரு பகுதியாக தர்மன் சண்முகரத்னம் பொதுமக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க இந்த அதிபர் பதவி உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
ஓர் அரசியல்வாதியாக இல்லாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு அதிபராக சேவை செய்ய விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவினாலும் அரசுப் பணிகளில் அதிகளவு அனுபவம் வாய்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக சிங்கப்பூர் தகவல்கள் கூறுகின்றன.
தர்மன் சண்முகரத்தினத்திற்கு அதிக வாய்ப்பு
நம் பெருமை மிகு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001-ல் சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர் பிரதமரின் ஆலோசகர் நிதியமைச்சர் கல்வி அமைச்சர் துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவருக்கு இந்த அதிபர் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
அதேவேளை மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் யாழ்ப்பாணம் – ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.