யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்! கொலை குற்றச்சாட்டில் 6 பேர் கைது

0
217

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நேற்று ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். விஷேட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த சிறுமி (9 வயது) ஒருவரை பாடசாலைக்கு வாகனத்தில் அழைத்துச்சென்று வரும் நிலையில் குறித்த நபர் சிறுமியிடம் தவறாக நடந்ததாக சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தீவிர விசாரணை

இந்நிலையில் குறித்த தகவலை தாயார் சித்தங்கேணியில் உள்ள தனது சகோதரனுக்கு தெரிவித்திருந்த நிலையில், அவர் கோப்பாய் வந்து குறித்த நபரை சிந்தங்கேணி அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரித்த போது அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை மீண்டும் கோப்பாய்க்கு கொண்டுவந்து அவரது இல்லத்தில் விட்டுச்சென்றுள்ளனர். 

இதனை தொடர்ந்து வீட்டில் விடப்பட்ட நிலையில் அவர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்! கொலை குற்றச்சாட்டில் 6 பேர் கைது | Jaffna Kalviyankadu Murder Update

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் உடலில் அடிகாயங்கள் காணப்பட்ட பொழுதும் உயிர் பிரிய கூடிய வகையில் காயங்கள் பாரதூரமானதாக இல்லை எனவும், குறித்த நபர் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட சிறுமியை இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றிரவு நீதிபதியின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.