போராளிகளுக்கான நலன்புரி விடயங்களிலே ஈடுபடுவோம். அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கியல்ல என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்தார்.
போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் விசாரணை தொடர்பிலும் இராணுவத்தினர் தம்மை சந்தித்தது தொடர்பாகவும் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் வவுனியா அலுவலகத்தில் இன்றையதினம் (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் விசாரணை தொடர்பிலும் இராணுவத்தினர் எங்களை சந்தித்தது தொடர்பாகவும் சில கருத்துக்களை கூற வேண்டிய கடப்பாடு இருக்கிறது.
போராளிகள் நலன்புரி சங்கம் என்ன காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது தொடர்பாக பொலிஸ், இராணுவ தரப்பிற்கு ஏற்கனவே அறிவித்தல்களை வழங்கியிருந்தோம்.
போராளிகள், புனர்வாழ்வளித்தவர்களிற்கு தொழில் வாய்ப்புக்களோ, வாழ்வாதாரத்திற்கோ, தொடர் வாழ்க்கைக்கோ அரசாங்கம் செய்ய தவறியிருக்கிறது என்பதை பல தடவை சுட்டி காட்டியிருக்கின்றோம்.
இன்று போராளிகள் பலர் பிச்சையெடுக்கின்ற நிலைமையில் இருக்கிறார்கள் என்று கூறி சமூக வலைத்தளங்களில் காட்டுகின்ற நிலைமை இருக்கிறது.
ஆகவே அந்த நிலைமைகளை மாற்ற வேண்டும் என்பதற்காக போராளிகள் நலன்புரி சங்கம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் டிரான் அலஸ் அவர்கள் கூறிய கருத்து புலி பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் நாடகமாக புலி வருகிறது என்ற விடயத்திலே இதுவும் ஒரு விடயமாக குறிப்பிட விரும்புகிறேன்.
2009 க்கு பின்னர் அரசாங்கம் விடுதலைப்புலிகளை அனுமதிக்கவில்லை. ஆனால் விடுதலை புலிகள் மட்டும் தான் தடை செய்யப்பட்ட அமைப்பாக காணப்படுகிறார்களே ஒழிய விடுதலைப்புலிகளில் இருந்தவர்கள் தடைசெய்யப்பட்டவர்களாகவோ அல்லது மாவீரர்கள் தடை செய்யப்பட்ட பட்டியலிலோ உள்ளடக்கப்பட முடியாது. சட்ட ரீதியாக அவர்களை தண்டிக்கவும் முடியாது.
நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரோடு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் இலங்கையிலே முன்னெடுக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து போரிட்டவர்களாக இரண்டு தரப்பு இருக்கின்றது. ஒன்று அரசதரப்பு மற்றையது விடுதலைப்புலிகள் தரப்பு இருக்கின்றது.
ஒருதலைப்பட்சமாக ஒரு தரப்பு இங்கே புறமொதுக்கப்பட்ட நிலைமையிலே 14 வருடங்கள் கடந்து எங்களுக்கான ஒரு திட்டமிடலும் இல்லாத ஒரு சந்தர்ப்பத்திலே இந்த களத்திற்கு வந்திருக்கின்றோம். எங்களுக்கு அரசியல் செய்கின்ற உரிமை இருக்கிறது.
போராளிகள், பொதுமக்கள், ஜேவிபிக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அரசியலை முன்னெடுப்பதற்கான உரிமை இருக்கின்றது. எங்களுடைய குரல்வளையை நெரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள கூடாது. ஏனென்றால் டிலான் அலஸ் அவர்கள் விடுதலைப்புலிகளில் பாரிய குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட ஒருவரை தனக்கு நெருக்கமான இடத்திலே வைத்திருக்கின்றார்.
அவர் எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது சிங்கள மக்களை முற்றுமுழுதாக ஏமாற்றுவதற்கான நாடகமாக தான் பார்க்கின்றோம்.
படைத்தரப்பு, பொலிஸ்தரப்போடு இணைந்து பணியாற்றியவர்கள் தான் பலர் மீளுருவாக்கத்திலே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க கூடியதை காண்கிறோம்.
டிரான் அலஸ் போன்ற அரசியல் வாதிகளால் தான் நாங்கள் ஆயுதம் துக்கியவர்களாக மாறினோம். எனவே தொடர்ச்சியாக அரசியல் கருத்துக்களும் அரசியல் வாதிகளுடைய நடவடிக்கைகளும் தான் இளைஞர்கள் ஆயுதம் தூக்க உந்தப்பட்டதற்கான காரணம்.
மீண்டும் ஒரு தலைமுறை ஆயுதம் தூக்காமல் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம். எங்களுடைய சந்ததி ஆயுத வழியில் பயணிக்காமல் இணக்கமாக சிங்கள மக்களோடு வாழ வேண்டும்.
நேற்றையதினம் ஜோசப்படை முகாமிலிருந்து இராணுவத்தினர் வந்து சந்தித்து போராளிகள் நலன்புரிச்சங்கத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் முன்னாள் போராளிகளுக்கு வீடுகள் அல்லது காணி நிலங்கள் அல்லது வறுமையில் வாடுபவர்களாக இருந்தால் முழு உதவிகளையும் செய்ய தாயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதனை மறுதலித்திருந்தேன்.
ஏனென்றால் கடந்த காலங்களில் இருக்ககூடிய அனுபவங்களின் அடிப்படையிலும் போர்க்குற்றம், பொதுமக்களினுடைய படுகொலைகள் இராணுவ தரப்பினால் எந்தவிதமான பதில்களும் வழங்கபடாது நீதிகள் கிடைக்காத சந்தர்ப்பத்திலே இரத்தம் படிந்த உங்களுடைய கைகளை நாங்கள் கைகோர்த்து கொள்வதில் எந்தவித உடன்பாடும் இல்லை என்பதை கூறியிருக்கின்றேன். தொடர்ச்சியான அழுத்தத்தையும் கொடுத்திருந்தார்.
சகல உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் எங்களை உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறும் கூறியிருந்தார். விடுதலைப்புலிகளுடைய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என்பதாக பிரச்சாரம் செய்யப்படுவதாக தமக்கு அழுத்தங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார். நலன்புரி சங்கம் போராளிகளுக்கான நலன்புரி விடயங்களில் ஈடுபடுமே ஒழிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடுகின்ற ஒரு அமைப்பாக இருக்காது என்பதை இந்த சந்தர்ப்பத்திலே வலியுறுத்த விரும்புகிறேன் என்றார்.