வடக்கில் அமையவுள்ள சீனி தொழிற்சாலை யாருக்கு சொந்தம்: செல்வம் அடைக்கலநாதன் அம்பலம்

0
350

சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம் எனத் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (03.07.2023) வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வவுனியாவில் சீனித்தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், சீனித்தொழிற்சாலை தொடர்பில் 4ஆவது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை.

 ஏற்றுக் கொள்ளப்போவதில்லை

நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களைச் சொல்லவில்லை. ஆனால் பலர் குத்திமுறிகிறார்கள். சிங்கள குடியேற்றம் வரும் எனவும் சீனா முதலீடு என்றும் கூறுகிறார்கள். 

எம்மைப் பொறுத்தவரைத் தமிழீழ விடுதலை இயக்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம்.

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்ப்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாகச் சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.

சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், பல பேர் குத்தி முறிகிறார்கள். 

வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்துச் சொல்லவில்லை. 

எந்த பங்காளியும் இல்லை

வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்குக் கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.

ஆகவே, தயவு செய்து யாரும் கத்தி முறியவேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூபிக்க முடிந்தால் நிரூபிக்கவும். அதைவிடுத்து சும்மா குத்திமுறிவதால் அர்த்தமில்லை.

இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்குச் செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்குக் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.

வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது: அம்பலப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன் | Selvam Adhikalanathan Regarding The Sugar Factory

முதலீட்டாளர்களைக் கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாடே ஒழியப் பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தைச் சொல்ல இருக்கின்றோம்.

சிலர் இதை எதிர்க்கிறார்கள்

வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்குப் போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்றுத் தான் நாம் முடிவெடுப்போம். 

எங்களைப் பொறுத்தவரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டைப் பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களைக் கூற வேண்டாம்.

வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேண்டாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டைக் கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காகச் சிலர் இதை எதிர்க்கிறார்கள்.

இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதைப் பற்றி யாரும் குத்தி முறிய வேண்டாம். நாமும் குத்தி முறியப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.