உணவு வங்கியில் கொள்ளையடித்த நபர்கள்; அரண்மனையிலிருந்து வந்த அழைப்பு..

0
311

 வேல்ஸ் நாட்டிலுள்ள உணவு வங்கியிலேயே சில மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உணவு வங்கியில் கொள்ளை

கடந்த சனிக்கிழமை மாலை, வேல்ஸ் நாட்டிலுள்ள Swansea என்ற இடத்தில் அமைந்துள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவு வங்கியில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள், பானங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள் மற்றும் சைக்கிள்கள் ஆகியவற்றை யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள்.

இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அந்த உணவு வங்கிக்கு அந்த பகுதியில் வாழும் மக்கள் 5 பவுண்டுகள் வழங்குவது முதல் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்கள்.

பிரித்தானிய அரண்மனையிலிருந்து வந்த அழைப்பு

இந்நிலையில், எதிர்பாராத நேரத்தில், கென்சிங்டன் அரண்மனையிலிருந்து தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாகத் தெரிவிக்கிறார் தேவாலய பாதிரியாரான Rev Steve Bunting.

அழைத்தவர்கள், இளவரசர் வில்லியமும் கேட்டும்! நேற்று, புதன்கிழமை, பாதிரியாரை அழைத்த வில்லியம் கேட் தம்பதியர், உணவு வங்கியில் நடந்த அசம்பாவிதம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன், திருட்டுப்போன அத்தனை பொருட்களுக்கும் பதிலாக, புதிய பொருட்களைத் தாங்கள் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர் தம்பதியர்.

மக்கள் அளித்து வரும் 5 பவுண்டுகள் உதவி முதல், இளவரசர் வில்லியம், கேட் தம்பதியர் வாக்களித்துள்ள உதவிவரை, மக்கள் தங்கள் மீது காட்டும் அன்பைக் கண்டு தாங்கள் திக்குமுக்காடிப்போயிருப்பதாகத் தெரிவிக்கிறார் Rev Bunting.

உணவு வங்கிலேயே கொள்ளையடித்த நபர்கள்: அரண்மனையிலிருந்து வந்த எதிர்பாராத அழைப்பு | Food Bank In Wales Has Been Robbed

எப்படியும், இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் எங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள்தானே என்கிறார் அவர்.

மன்னர் சார்லசைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேட்டும்தான், தற்போது வேல்ஸ் நாட்டு இளவரசர், இளவரசி என்னும் பட்டத்துக்குரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.