கடந்த பதினான்காம் சிங்கள புத்தாண்டு தினத்தன்று வென்னப்புவ பிரதேசத்திலுள்ள மூன்று வீடுகளில் இருந்து வேலை தேடி வீட்டை விட்டு ஓடிய சிறார்கள் மூவரும் இன்று (18) அம்பலாந்தோட்டை கலகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கண்டு பிடிக்கப்பட்டதாக வென்னப்புவ தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட மூன்று சிறார்களும் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக வென்னப்புவ தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல்
வென்னப்புவ காவல்துறை தலைமையக நிலைய பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் திலின ஹெட்டியாராச்சிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மூன்று சிறுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
வீட்டை விட்டு ஓடிய 14 வயது சிறுவனின் தந்தை அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் வசிப்பதாகவும், மூன்று சிறார்களும் அந்த வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதினான்கு வயதுடைய சிறுவனின் தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள தென்னை நார் ஆலை ஒன்றில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த திருமணத்தில் தாயாருக்கும் ஒரு மாத குழந்தை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இசை நிகழ்ச்சியை பார்க்க சென்ற சிறுவர்கள்
இந்த மூன்று சிறார்களும் கடந்த 13ஆம் திகதி இரவு வென்னப்புவவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றுவிட்டு மறுநாள் அதிகாலை வீடு திரும்பினர். இசை நிகழ்ச்சியைக் காணச் சென்ற மூன்று சிறார்களில், பதினைந்து வயது சிறுவனின் வளர்ப்புத் தாய் சிறுவனை குற்றம் சாட்டி, ஒரு கையால் முதுகில் அறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சிறுவனின் தாாயர் எட்டு மாதங்களுக்குப் முன்னர் புற்றுநோயால் உயிரிழந்து விட்டார். தந்தை பல வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவனையும் அவனது தந்தையையும் 73 வயது தாத்தாவே வேலைக்கு சென்று பராமரித்து வருகின்றார்.
வீட்டை விட்டு வெளியேறிய மற்றுமொரு 14 வயது சிறுவனின் தாயும், பிள்ளையையும் தந்தையையும் விட்டுவிட்டு வேறு திருமணத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த 14 வயது சிறுவனின் தந்தை கொத்தனாராக வேலை செய்கிறார்.
இந்த மூன்று சிறுவர்களையும் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை வென்னப்புவ தலைமையக கவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மூன்று பிள்ளைகளும் வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வருகின்றனர்.