யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (13) இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றது. சம்பவத்தில் நவாலி மானிப்பாயை சேர்ந்த செல்வமகேந்திரன் கமலரூபன் (வயது-36 ) என்பவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிசார் வீதிச் சோதனையில் நிற்கவில்லை
யாழில் இருந்து மன்னார் நோக்கி நேற்று இரவு 9.30 மணியளவில் பயணித்த சமயம் முழங்காவில் பகுதியில் பொலிசார் வீதிச் சோதனைக்காக வழி மறித்துள்ளனர்.
எனினும் காரை நிறுத்தாமல் சென்ற நிலையில் பொலிஸார் கார் மீது துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் மன்னார் முருங்கன் வரை பயணித்துள்ளார்.
அதன் பின் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.