வவுனியாவில் மர்மமாக உயிரிழந்த பிள்ளைகள்; உடற்கூறாய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்

0
438

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தைகள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு அந்த இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் தந்தை, தாய் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் (07-03-2023) செவ்வாய்க்கிழமை காலை சடலங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.

42 வயதான சிவபாதசுந்தரம் கௌசிகன், 36 வயதான வரதராயினி, 9 வயதான மைத்ரா, 3 வயதான கேசரா ஆகிய நால்வரதும் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டது.

குடும்பத் தலைவரான கௌசிகனின் சடலம் வீட்டின் விறாந்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. அவரது மனைவியும் பிள்ளைகளும் அவரவர் படுக்கையில் தூங்கும் நிலையில் இருந்தனர். அவர்களின் சடலங்கள் போரவையால் நன்கு போர்த்தப்பட்டிருந்தன.

வவுனியாவில் மர்மமாக உயிரிழந்த பிள்ளைகள்: உடற்கூறாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | Vavuniya Family Murder Children S Strangled Rope

உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு நேற்றும் இன்றும் நடைபெற்றது. அதன் முடிவில் இரு பிள்ளைகளும் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

தந்தை தூக்கில் தொங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கின்றார் என்கின்ற முடிவுக்கு சட்ட வைத்திய அதிகாரி வந்துள்ளார்.

கௌசிகனின் சடலத்தில் வேறு எந்தத் தடயங்களோ, காயங்களோ இல்லாத காரணத்தால் அவரது இறப்பு தூக்கில் தொங்கியதால் ஏற்பட்டது என்கின்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால், இரண்டு குழந்தைகளினதும் தாயாரான வரதராயினியின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

வவுனியாவில் மர்மமாக உயிரிழந்த பிள்ளைகள்: உடற்கூறாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | Vavuniya Family Murder Children S Strangled Rope

அவரதும் கணவனான கௌசிகனதும் உடல் உறுப்பு மாதிரிகளும் குருதி மற்றும் சிறுநீர் மாதிரிகளும் மேலதிக ஆய்வுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடமிருந்து முழுமையான அறிக்கை கிடைத்த பின்பே இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியால் உறுதியான முடிவுக்கு வரமுடியும்.

இதேவேளை, குடும்பத்தினர் கூண்டோடு இறப்பதற்கு முதல் இரவு, அதாவது கடந்த திங்கட்கிழமை (06-03-2023) இரவு அந்த வீட்டுக்கு வந்து சென்றிருக்கின்றது என்று பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ள ஒரு ஹயஸ் வாகனம் பற்றிய விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வாகனத்தைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.