தலைவர் பிரபாகரனை உயிர்ப்பிப்பதன் பாரிய திட்டம்; தயார் நிலையில் உள்ள ஒளி – ஒலி வடிவங்கள்

0
281

கடந்த வாரம் “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்” என பழ. நெடுமாறனும் கவிஞர் காசி ஆனந்தனும் அறிவித்தது இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த அறிவிப்பிற்கான பின்னணி என்ன என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்கிளப்பு – அம்பாறை மாவட்ட அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளரும் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தயா மோகன் பல அதிரவைக்கும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தை கொடுப்பதற்கான அழுத்தம் வருகின்றபோது, இதைக் காரணம் காட்டி இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பார்கள்.

சிங்கள கடும்போக்காளர்களிடம் கொதி நிலையை ஏற்படுத்தி, குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட தீர்வுத் திட்டத்தைக்கூட தமிழ் மக்களுக்குத் தர மாட்டார்கள். அங்குள்ள தமிழ் மக்களுக்கு இது ஒரு பாதிப்பான விஷயம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பல முறை நெடுமாறன் இப்படி சொல்லி இருந்தாலும் கூட முந்தைய தடவைகளுக்கும் இந்த முறைக்கும் வித்தியாசம் இருக்கிறது. பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் வசூல் செய்வதைத் தடுத்த பிறகு, இதைப் பற்றியெல்லாம் வெளியில் சொல்லி மக்களைக் குழப்ப வேண்டாம் என்றுதான் இருந்தோம்.

ஆனால், அவர்கள் விடாமல் இப்படிச் செய்வது ஆபத்தானது. அந்த ஆபத்து எப்படியானது என்றால், இப்போது இவர்கள் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரின் படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அவற்றை உண்மை எனக் காட்டி வருகிறார்கள்.

அதே நேரம், பிரபாகரன் நோய் வாய்ப்பட்டிருப்பதாகவும் ஒரு கருத்தைப் பரப்பிவருகிறார்கள். அவருடைய சிகிச்சைக்கு நீங்கள் போதுமான பணம் தரவில்லை, ஆகவே அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைப் பரப்பப்போகிறார்கள். அந்தத் தலைவரின் பெரும் பிம்பத்தை மக்கள் வெறுக்கும் அளவுக்கான சூழலை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

எதிர்காலத்தில் அப்படியான செய்திதான் வரப்போகிறது. அதற்குத் தயார் படுத்திவிட்டார்கள். ஒளி – ஒலி வடிவங்களையெல்லாம் தயார் செய்துவைத்துவிட்டார்கள். எந்தெந்த நேரத்தில் எந்தெந்தப் படங்களை, குரல்களை வெளியிடுவது என்பதையெல்லாம் தயாரித்துவிட்டார்கள்.

அவருடைய பெருமைக்கும் கௌரவத்திற்கும் ஆபத்து வரப்போகிறது என்பதால்தான் வெளியில் வந்து பேச வேண்டியிருக்கிறது.பணம் வசூலிப்பவர்கள் பிரபாகரனை சிறுமைப்படுத்துவதற்கான முயற்சி இது  என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நேரத்தில் இன்னும் ஒரு விஷயத்தையும் புலம்பெயர்ந்த மக்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. விடுதலைப் புலிகள் பெயரைச் சொல்லி பணம் கேட்பவர்கள் யாரையும் நீங்கள் ஏற்காதீர்கள். ஊக்கப்படுத்தாதீர்கள்.

விடுதலைப் புலிகள் இனிமேல் நிதி சேகரிப்பில் ஈடுபட மாட்டார்கள். போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நிதி கோரினால், அது தவிர்க்க முடியாதது.

ஆனால், அப்படி உதவிசெய்ய விரும்பினால், உங்கள் நணபர்கள் வாயிலாக பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாகப் பேசிவிட்டு அந்த உதவிகளைச் செய்யுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பிரபாகரன் மனைவி, மகள் போல வேறு சிலரை காணொளி காட்சிகள் மூலம் உருவாக்கி விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நேரில் நிறுத்த முடியாது என்பது உண்மைதான் என்பதால் அதற்காகத்தான் தான் முன்பே சொன்னதுபோல நோயால் இறந்தது போன்ற சூழலை உருவாக்குவார்கள். இதுதான் மிகப் பெரிய ஆபத்து எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காசி ஆனந்தன், பழ. நெடுமாறனை பொறுத்தவரை, 90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த போராட்ட வடிவங்கள், போராட்ட மாறுதல்கள் பெரிதாகத் தெரியாது.

சில அரசியல் நிகழ்வுகள் சார்ந்து, தகவல்களை பிரபாகரன் சில போராளிகள் மூலம் சொல்லி இருப்பார். அதற்கேற்றபடி சில விஷயங்களை அவர் செய்திருக்கலாம். அதைத் தவிர, போர்க்களம் தொடர்பாக இருவருக்குமே எதுவுமே தெரியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.