ஹோமாகம மரண விசாரணை அதிகாரியின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 50 நாட்களில் 15 வயது பாடசாலை மாணவி உட்பட 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதிவான் சிந்தக உதயகுமார தெரிவித்துள்ளார்.
15-65 வயதுக்கு இடைப்பட்டவர்கள்
பனாகொட, ஹபரகட, நியதகல, பிடிபன, ஹிரிபிட்டிய, மீகொட, ஹங்வெல்ல மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் அனைவரும் 15-65 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்களில் ஏழு பேர் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாவர்கள் எனவும் அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களில் பல மரணங்கள் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தினால் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன், காதல் உறவினால் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த தற்கொலைக்கு காரணம் என தெரிய வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 15 வயது பாடசாலை மாணவியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், தந்தை வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.