தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது.
அதற்காக பாரியளவில் செலவும் செய்யப்பட்டது. அந்த போர் முடிவுக்கு வந்ததால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இராணுவத்தினரை மறுநாளே வெளியேற்ற முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை குறித்தும், நாட்டின் எதிர்காலம் குறித்தும் அண்மையில் இளைஞர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாதுகாப்பு அமைச்சகம் என்பது இராணுவம் மட்டுமல்ல. இடர்முகாமைத்துவம் உள்ளிட்ட பல பகுதிகள் இதில் அடங்கும். அதற்கான செலவுகளும் உள்ளன.
எனவே, இராணுவச் செலவை, ஏனைய விடயங்களைப் போல 24 மணி நேரத்தில் மாற்ற முடியாது. நமது இராணுவம் பணியாளர்களுக்காக அதிக பணத்தை செலவிடுகிறது. அவற்றை ஒரேயடியாக 40,000 ஆக 50,000 ஆகக் குறைக்க முடியாது.
அவர்கள் விருப்பத்துடன் சேவையில் இருந்து விலக அனுமதிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி இராணுவத்தையோ அல்லது வேறு எந்த அரச சேவையையோ விட்டு யாரும் விலகவில்லை. எதிர்காலத்தில் கடற்படை மற்றும் விமானப்படையில் கவனம் செலுத்த வேண்டும்.
இராணுவத்தில் ஆட்கள் குறையலாம். ஆனால் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்று இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது. செலவு செய்யப்பட்டது. அந்தப் போர் முடிவுக்கு வந்ததால் அவர்களை மறுநாளே வெளியேற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.