பிரித்தானிய வனப்பகுதியில் பல வருடங்களாக தனிமையில் விடப்பட்ட ரயிலை ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஆனால் அந்த ரயில் எப்படி வந்தது என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.
பிரிட்டனின் சஃபோல்க் கிராமப்புறத்தில் உள்ள காடுகளில் இந்த ரயில் நிற்கிறது. ஹாரி பாட்டர் படத்தில் வரும் மர்ம ரயில் போலவே காட்சியளிக்கும் இந்த நீராவி ரயில் கடந்த 1950 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்கேண்டிநேவியா பகுதியில் உள்ள பின்லாந்தில் இந்த ரயில் கட்டப்பட்டிருக்கிறது. இதனிடையே இங்கிலாந்தின் சுகாதார துறையில் நோயியல் தகவல் அதிகாரியாக பணிபுரியும் ஸ்டீவ் என்பவர் சமீபத்தில் இந்த ரயிலை கண்டுபிடித்திருக்கிறார்.
இதுபோன்ற, கைவிடப்பட்ட கட்டிடங்கள், பழங்கால மாளிகைகள் ஆகியவற்றை தேடிக் கண்டுபிடிப்பதை பொழுதுபோக்காக செய்துவருகிறார் இவர். இதனிடையே சமீபத்தில் இந்தக் காட்டுக்குள் பயணித்த அவர், ரயிலை கண்டுபிடித்திருக்கிறார். சுற்றிலும் மரங்கள் அடர்ந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்த ரயிலை கண்டதும் ஒருநிமிடம் ஆடிப்போய்விட்டார் ஸ்டீவ்.
அதன்பிறகு ரயிலுக்கு அருகே சென்றிருக்கிறார் அவர். இதுபற்றி பேசுகையில்,”இந்த நீராவி ரயில் எனது சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இதைக் கண்டுபிடிப்பதற்காக நிறைய ஆராய்ச்சி மற்றும் வரைபட ஸ்கேனிங் செய்யப்பட்டது. இது இப்போது முட்புதர்களால் சூழ்ந்திருக்கிறது. ஆனால் அதன் அளவைப் பார்க்க முடிகிறது. உள்ளூர் மக்களுக்கு இந்த ரயில் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால், இது எப்படி இங்கு வந்தது என்பது குறித்து பெரும்பாலும் ஆதாரம் இல்லாத கதைகளே அவர்களிடத்தில் இருக்கின்றன. ஆகவே இது மிகவும் விசித்திரமானது” என்றார்.
இந்த ரயில் புதுப்பிக்கும் நோக்கத்துடன் சிலரால் வாங்கப்பட்டதாக சில வதந்திகள் உள்ளன. ஆனால் அவற்றுக்கும் ஆதாரம் இல்லை என்கிறார் ஸ்டீவ். இதுபற்றி அவர் பேசுகையில்,”1950 ஆம் ஆண்டில் ஒரு ஸ்காண்டிநேவிய நிறுவனத்தால் இந்த ரயில் கட்டப்பட்டது. இது கொடூரமான பின்லாந்து குளிர்காலத்தைத் தாங்கும் வகையில் இது கட்டப்பட்டுள்ளது. ஆனால், இப்பொது இந்த காடுகளுக்குள் சிக்கியிருக்கிறது” என்றார்.
இந்த ரயில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் அருகில் சென்றதும் புகை மற்றும் எண்ணெய் வாசனை வருவதாக கூறியுள்ளார் ஸ்டீவ். இதனிடையே இந்த ரயிலை அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.