சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று “நீயா நானா”.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து பலரின் விருப்பமிக்க நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, இதில் விவாதிக்கப்படும் டாபிக்குகள் கூட பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய வகையில் தான் இருக்கும். இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிகரமான நிகழ்ச்சியாக நீயா நானா இருப்பதற்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் இது பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசப்படும் விஷயங்கள் அடிக்கடி இணையத்தில் ட்ரெண்ட் ஆகியும் வரும். அது மட்டுமில்லாமல் இணையத்தில் பேசு பொருளாகவும் இந்த விஷயங்கள் மாறும். அந்த வகையில் தற்போது அண்ணன் தங்கை பாசம் தொடர்பான வீடியோக்கள் பலர் மனதையும் உருகும் வகையில் அமைந்துள்ளது.
சமீபத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில், “கிராமத்து அண்ணன் – தங்கை VS நகர்ப்புற அண்ணன் – தங்கை” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றிருந்தது. இதில், இரு தரப்பினரும் தங்கள் சார்பில் பல கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர். அப்போது அண்ணனுக்காக தங்கை அழுவதும் தங்கைக்காக அண்ணன் அழுவதும் கிராமத்தில் தான் நடக்கும் என ஒருவர் குறிப்பிடுகிறார்.
இது பற்றி நகர்ப்புற அணியில் இருந்து ஒருவர் பதில் சொல்ல இதனைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள ஒரு அண்ணன் – தங்கை அழுகை பற்றி பேசிய விஷயங்கள் தான் இதன் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. அப்போது பேசும் கிராமப்புற அண்ணன் ஒருவர், “இப்போது நான் படிக்கவோ அல்லது வேறு காரணத்திற்காக அவரை பிரிந்து சென்று விட்டால், அது பற்றி எனது தங்கை வாயாற சொல்லாமல் ஸ்டேட்டஸில் வைப்பார். அவர் வைக்கும் அந்த ஸ்டேட்டஸ் பார்த்து நான் அழுதுள்ளேன்” என தெரிவிக்கிறார்.
இதனைக் கேட்ட அவரது தங்கை, “எனது ஸ்டேட்டஸை பார்த்து விட்டு மிகவும் ஜாலியாக தான் Reply செய்வார். அவர் என்னை அரிசிமூட்டை என்றே அழைப்பார். ஆனால், எனக்காக அழுதிருக்கிறான் என்றே எனக்கு தெரியாது. எனக்காக அவன் அழுகிறான் என்பதே இப்போது தான் தெரியும்” என கூறிய படியே கண் கலங்குகிறார்.
மிகவும் ஜாலியாகவே இருக்கும் அண்ணன், தனக்காக அழுதுள்ளான் என்ற விஷயம் தொடர்பான வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.