பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரி குறித்து ஜிபி முத்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த ஒரு வாரம் முன்பு தமிழில் ஆரம்பமான பிக்பாஸ் 6 வது சீசன் அடுத்தடுத்து பல சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் தினமும் சில ட்விஸ்ட்கள் நடந்து வருவதை போட்டியாளர்கள் உற்சாகத்துடன் ரசித்து வருகின்றனர். பிக் பாஸ் அல்டிமேட்டைப் போலவே, பிக் பாஸ் சீசன் 6 டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக, பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட எப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. இதற்கு மத்தியில் வார இறுதியில் போட்டியாளர்களிடம் கமல் பேசும் எபிசோடுகளும் அரங்கேறும். அந்த வகையில் சமீபத்தில் போட்டியாளர்களுடன் கமல் கலந்துரையாடும் விஷயங்கள் பெரிய அளவில் சுவாரஸ்யத்தையும் உண்டு பண்ணி இருந்தது.
அந்த வகையில், ஜிபி முத்துவிற்கு வந்த கடிதம் தொடர்பான விஷயமும் அதில் உள்ள கேள்விகளுக்கு ஜிபி முத்து அளித்த பதில்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
வார இறுதியில் கமல் தோன்றும் போது ரசிகர்களிடம் இருந்து வந்ததாக கூறி ஒரு போஸ்ட் பாக்ஸ் ஜிபி முத்து பெயரில் கொடுக்கப்படுகிறது. அதில் ஏராளமான கடிதங்களும் இடம்பெற்றிருந்தது. அதனை அசீம் படிக்க ஜிபி முத்து தனது பதில்களையும் அளித்து வந்தார். அதில், தான் இணைந்து நடிக்க விரும்பும் கதாநாயகிகள் குறித்தும் அமுதவாணன் குறித்தும் பல கேள்விகள் இடம்பெற்றிருந்தது. இவை அனைத்திற்கும் அசராமல் பதிலளித்திருந்தார் ஜிபி முத்து.
அப்படி, மகேஸ்வரி குறித்த கேள்வி ஒன்றும் இடம்பெற்றிருந்தது. அதில், “தலைவரே நீங்கள் மகேஸ்வரியிடம் மட்டும் அடக்கி வாசிக்கிறீர்களே அவர் என்றால் உங்களுக்கு அவ்வளவு பயமா?” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த ஜிபி முத்து, “அப்படி எதுவுமில்லை. ரொம்ப பாசமாக இருக்காங்க. நானுமே எல்லோருடன் அன்பாக இருக்கிறேன். நேற்று அவரின் தலையில் காயம் ஏற்பட்டதும் எனக்கு பதற்றம் உருவானது” என தெரிவித்தார்.