கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த 3 பேர் கைது!

0
548

இந்திய கேரளா மாநிலத்தில் தமிழக பெண் உட்பட 2 பெண்களை நரபலி கொடுத்துள்ளதுடன் அவர்களின் உடல் துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்பவர். கேரள மாநிலம் கொச்சியில் லொட்டரி விற்று வந்துள்ளார்.

அதேபோல், காலடியை சேர்ந்த ரோஸ்லின் என்பவரும் லொட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர் ஒருவர் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் லைலா – பகவந்த் சிங் தம்பதியினர் இவர்கள் இருவரையும் விரைவில் பணக்காரர்கள் ஆகும் நோக்கில் நரபலி கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டுபிடித்த கேரள பொலிஸார் நரபலி கொடுத்த தம்பதி மற்றும் இடைத்தரகர் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மாவின் உறவினர்கள் அவரது தொலைபேசிக்கு அழைத்துள்ளனர். ஆனால், பத்மாவின் தொலைபேசிக்கு தொடர்பு கிடைக்காததால் கொச்சி பொலிஸில் செப்டெம்பர் 27இல் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பத்மாவின் தொலைபேசி சிக்னலை ஆராய்ந்த பொலிஸார் கடைசியாக பத்தினம்திட்டா மாவட்டம் திருவலா பகுதியோடு சிக்னல் நின்றதை தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பொலிஸாரின் விசாரணையில் திருவலா பகுதி தம்பதியால் பத்மாவும் நோஸ்லின் என்ற பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டு அவர்கள் வீட்டிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் அம்பலமானது.

இதுகுறித்து கொச்சி பொலிஸ் ஆணையர் கூறுகையில் கொல்லப்பட்ட இரு பெண்களின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு தடவியல் துறை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். நரபலி கொடுத்த பின் அந்த பெண்ணின் உடலையும் துண்டு துண்டாக வெட்டி திருவாழா நகரின் மற்றொரு இடத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் புதைத்துள்ளனர்.

நரபலி கொடுக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டி திருவாழா நகரின் வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டும் பணியை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட முகவர் மற்றும் தம்பதிகளிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.