இலங்கையில் உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (01) சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் மிருகக்காட்சிசாலைகளுக்கு இலவசமாக செல்ல முடியும் என விவசாயம், வனவிலங்கு மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
உலக குழந்தைகள் தினம் மற்றும் உலக முதியோர் தினம் ஆண்டு தோறும் ஒக்டோபர் முதலாம் திகதியன்று கொண்டாப்பட்டு வருகிறது.
இத்தினத்தை கொண்டாடும் வகையில், பாடசாலை செல்லும் சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோரை மிருகக்காட்சியாலைகள் மற்றும் உயிரியல் பூங்காக்களுக்கு இலவசமாக செல்வதற்கு அனுமதிக்குமாறு விவசாயம், வனவிலங்கு மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய விலங்கியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, அனைத்து மிருகக்காட்சிசாலைகள், உயிரியல் பூங்கா களுக்கு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இலவச நுழைவுச் சீட்டை வழங்க தேசிய விலங்கியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், இந்த உயிரியல் பூங்காக்களில், குழந்தைகளுக்கு விலங்குகள் பற்றிய கல்வி அறிவை வழங்கும் வகையில் பல்வேறுபட்ட கல்வி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், விலங்குகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மிருகக்காட்சிசாலைகளுக்கு வரும் குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் அனுசரணை வழங்க முன்வந்துள்ளதாகவும் தேசிய விலங்கியல் துறை தெரிவித்துள்ளது.