ஹிஜாப் அணிந்தால் தான் பேட்டி கொடுப்பேன் என ஈரான் ஜனாதிபதி கூறிய விடயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வெறும் நாற்காலிக்கு எதிரே அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பெண் நெறியாளர்.
அமெரிக்க பெண் நெறியாளருக்கு ஈரான் ஜனாதிபதி பேட்டி அளிக்க மறுத்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் 22 வயது பெண்ணான மாஷா அமினியின் மர்ம மரணம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக நடக்கும் போராட்டத்தில் 31 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு முதல் முறையாக சென்றுள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியிடம் சர்வதேச ஊடகம் ஒன்றின் பெண் நெறியாளர் பேட்டி எடுப்பதாக இருந்தது.
அதற்காக அரங்கு தயார் செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி இப்ராஹிம் அங்கு வரவில்லை. தன்னை பேட்டி எடுக்கும் பெண் ஹிஜாப் அணிய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் நெறியாளர் கிறிஸ்டியானே அமன்புர் மறுப்பு தெரிவித்ததுடன் இது ஈரான் இல்லை அமெரிக்கா என்றும் இங்கே அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், இதற்கு முன்பு இங்கே வந்த ஈரான் ஜனாதிபதிகள் யாரும் இப்படி கூறியதில்லை என்று ஜனாதிபதியின் உதவியாளரிடம் கிறிஸ்டியானே தெரிவித்துள்ளார். அதற்கு உதவியாளரோ இது புனித மாதமான மொகரம் என்பதால் ஹிஜாப் அணிந்து தான் பேட்டி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனாலும் கிறிஸ்டியானே அதனை ஏற்கவில்லை.
இதனால் நேர்காணல் நடைபெறவில்லை. இந்த நிகழ்வை குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தள பக்கத்தில் கிறிஸ்டியானே பதிவிட்டிருந்தார்.
அதில் கிறிஸ்டியானே நாற்காலியில் அமர்ந்திருக்க எதிர்முனை நாற்காலி காலியாக உள்ளது. இதனால் ஈரான் ஜனாதிபதி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.