அமெரிக்காவில் சொந்த பிள்ளைகள் மூவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாயார் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புரூக்ளின் நகரமருகே கோனி தீவில் குறித்த பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. புதன்கிழமை 30 வயதான எரின் மெர்டி என்ற பெண்மணியை கைது செய்த பொலிசார் அவர் மீது மூன்று இரண்டாம் நிலை கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஞாயிறன்று நள்ளிரவு எரின் மெர்டி தொடர்பில் பொலிசாருக்கு குடும்ப உறுப்பினர் ஒருவரால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்த பொலிசார் சுமார் 90 நிமிடங்களுக்கு பின்னர் கோனி தீவில் மயக்கமடைந்த நிலையில் எரின் மெர்டியை மீட்டுள்ளனர்.
ஆனால் அப்போது அவருடன் பிள்ளைகள் காணப்படவில்லை. தொடர்ந்து பொலிசார் முன்னெடுத்த தேடலில் 2 மைல்கள் தொலைவில் சுமார் 4.30 மணியளவில் பிள்ளைகள் மூவரையும் கண்டுபிடித்துள்ளனர்.
3 மாதமேயான ஆலிவர் பொண்டரேவ், 4 வயது லிலியானா மெர்டி மற்றும் 7 வயது சகரி மெர்டி ஆகியோரே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டவர்கள்.
மருத்துவமனையில் அவர்கள் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து எரின் மெர்டியிடம் பொலிசார் விசாரித்துள்ளனர். தற்போது கொலை வழக்கு தொடர்பில் எரின் மெர்டி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சொந்த பிள்ளைகளை கொலை செய்ததன் காரணம் தொடர்பில் அவர் இதுவரை தெரிவிக்கவில்லை என்றே பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.