ஒப்பரேஷன் கங்கா நடவடிக்கையின் கீழ் ரஷ்யா-உக்ரைன் மோதலின் போது இந்தியா தனது குடிமக்களை போர் சூழலிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றியதை நினைவு கூர்ந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்தியா பாரிய விடயங்களை முன்னெடுப்பதில் வல்லது என்றும் கூறினார்.
பிரேசில் – சாவ் பாலோவில் நடந்த இந்திய சமூக நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
இந்தியா சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் போது நாட்டின் மனநிலை மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது. உக்ரைன்-ரஷ்யா மோதலின் போது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியின் மூலம் ஏராளமான மக்களை வெளியே கொண்டு வந்தோம்.
எல்லை ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்துள்ளதாகவும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தை கடந்து வருவதால் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நிழலிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
1990 களிலிருந்து சீனாவுடன் ஒப்பந்தங்கள் உள்ளன. அவை எல்லைப் பகுதியில் படைகளைக் கொண்டு வருவதைத் தடுக்கின்றன. ஆனால் அதை அவர்கள் அலட்சியம் செய்துள்ளனர்.
கல்வான் பள்ளத்தாக்கில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த பிரச்சனை தீர்க்கப்படவில்லை. மேலும் இதன் போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான தற்போதைய எல்லைச் சூழல் குறித்து பேசிய ஜெய்சங்கர் உறவை ஒருவழிப் பாதையாக மாற்ற முடியாது என்றும் அதைத் தக்கவைக்க பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதேவேளை மூன்று நாடுகளின் பயணத்தின் முதல் கட்டமாக பிரேசிலின் சாவ் பாலோவில் இந்திய சமூகத்தை ஜெய்சங்கர் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கும் அவர் செல்லவுள்ளார்.