லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்துள்ள காணி மற்றும் கட்டடத்தை நட்சத்திர ஹோட்டல் தொகுதியை நிர்மாணிக்க முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பில் ஊடகத்துறை அமைச்சிடம் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார். லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கடனை செலுத்தும் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தை வேறு இடத்தில் ஆரம்பிப்பது அல்லது முற்றாக விற்பனை செய்யும் யோசனை
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தற்போதைய காணி மற்றும் கட்டடத்தை விற்று பெறும் பணத்தில் கொழும்பு நகரில் வேறு ஒரு இடத்தில் நிறுவனத்தை ஆரம்பிப்பது அல்லது நிறுவனத்தை முற்றாக விற்பனை செய்து விடுவது என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
பழைய காலத்து கட்டடம் என்ற காரணத்தினால் அது ,சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதால், லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்துள்ள கட்டடத்தில் சுற்றுலாத்துறை சார்ந்த ஹோட்டலை நிர்மாணிப்பது இதன் நோக்கம் என ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு முடியும் குத்தகை காலம்
லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்துள்ள காணி 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. குத்தகை காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளது.
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாட்டனார் டி.ஆர்.விஜேவர்தன லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஸ்தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது.