சவுதி இளவரசராக இருந்த முகமது பின் நயீப்-பின் (Muhammad bin Nayef) நீண்டகால ஆலோசகராக பதவி வகித்த அல்ஜப்ரி சவுதியின் தற்போதைய இளவரசர் முகமது-பின்-சல்மான் (Mohammed bin Salman Al Saud) குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சவுதி உளவுத்துறை முன்னாள் உயரதிகாரி அல்ஜப்ரி கூறியிருப்பதாவது,

“எம் பி எஸ் கடத்தல் மற்றும் கொலைகளை மேற்கொள்ள “புலிப்படை” என்று அழைக்கப்படும் கூலிப்படையின் கொடூரமான கும்பலை நடத்துகிறார். முகமது-பின்-சல்மான் தனது மக்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த பூலோகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளார்.
முகமது-பின்-சல்மான் ஒரு மனநோயாளி, பச்சாதாபம் இல்லாதவர், உணர்ச்சிகளை உணரமாட்டார். அவருடைய அனுபவத்திலிருந்து ஒருபோதும் பாடங்களை அவர் கற்றுக்கொள்ளவில்லை.
இந்த கொலையாளி செய்த அட்டூழியங்களையும் குற்றங்களையும் நாங்கள் கண்ணால் பார்த்திருக்கிறோம்.” 2017 ஜூன் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார் இளவரசர் முகமது பின் நயீப்.
அதற்கு பின்னர், அல்ஜப்ரி தனது உயிருக்கு பயந்து பின்னர் நாட்டை விட்டு வெளியேறி கனடாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவர் இப்போது தலைமறைவாக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் பேசிய அல்ஜப்ரி,
“சவுதி அரசாங்கம் மற்றும் அந்நாட்டின் அரச குடும்பத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களை நான் தெரிந்து வைத்திருப்பதால் அணுகுவதால் ஒரு நாள் இளவரசர் முகமது-பின்-சல்மானால் கொல்லப்படுவேன்” என்று கூறினார்.
இந்த நிலையில், அவருடைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்காவில் உள்ள சவூதி தூதரகம், அல்ஜப்ரியை “ஒரு மதிப்பிழந்த முன்னாள் அரசு அதிகாரி” என்றும் “அவர் செய்த நிதிக் குற்றங்களை மறைப்பதற்காகவே இது போன்ற கதைகளை உருவாக்குகிறார்” என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதிக்கு வருகை தரவுள்ளார்.
இருதரப்பு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக பைடன் மற்றும் பட்டத்து இளவரசரான முகமது-பின்-சல்மான் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.